

டெல் அவிவ்,
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள ரமத் கான் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள பெனி பிராக் நகரிலும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு நபர் காயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த இடங்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், பாதுகாப்பு படைகளின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் அந்நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.