டிரம்ப் புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்; ஈரானிய ஊடகங்கள் கடுமையாக சாடல்

ஈரான் மீது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெரிய அளவில் தாக்குதல் நடத்தும்படி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்ட தகவல் வெளியானது.
டிரம்ப் புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்; ஈரானிய ஊடகங்கள் கடுமையாக சாடல்
Published on

தெஹ்ரான்

டிரம்ப் புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் என ஈரானிய ஊடகங்கள் கடுமையாக சாடியுள்ளன.

ஈரான்-அமெரிக்கா இடையே இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதற்கு ஈரான் தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை. இந்த சூழலில், ஈரானில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் டிரம்ப்பை கடுமையாக தாக்கும் வகையில் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஈரானிய ஊடகங்கள்

அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ஈரானின் பார்ஸ் ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இரு நாடுகள் இடையேயான முன்னேற்றம் பற்றி குறிப்பிடும்போது, முட்டாள் டிரம்ப் தன்னுடைய சக்தியை இழந்து விட்டார் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று மெஹர் என்ற மற்றொரு செய்தி ஊடகம் தெரிவித்து உள்ள செய்தியில், தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என ஈரான் கேட்டு கொண்டது என்று டிரம்ப் கூறிய விசயங்களை நிராகரித்து உள்ளது. அந்த செய்தியில், வெற்று மிரட்டல்களால் டிரம்ப் மீண்டும் பின்வாங்கி விட்டார் என்றும் தெரிவித்து உள்ளது.

புதிய பொய்

டிரம்ப்பின் அறிவிப்பு வேறு ஒன்றும் அல்ல. அது ஒரு புதிய பொய். ஈரானின் ஆயுத படைகள் உஷாராக உள்ளதுடன், எந்தவித தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று ஈரான் ராணுவ அதிகாரிகளை குறிப்பிட்டு, தெரிவித்து உள்ளது.

ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஈரான் மீது தாக்குதலை நிறுத்துவது என்ற டிரம்ப்பின் முடிவுக்கு முக்கிய காரணம், அந்நாட்டிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறையே என குறிப்பிட்டு உள்ளது.

இடைக்கால தேர்தல்

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் வரவுள்ள சூழலில், அதனை கவனத்தில் கொண்டே டிரம்ப் இதுபோன்று செயல்படுகிறார் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து, வான்வெளி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டார். தொடர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

ஈரான் தாக்குதல்

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. ஏறக்குறைய 5 மாதங்களாக போரை ஈரான் எதிர்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

எனினும், ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதன் தொடர்ச்சியாக, ஈரான் மீது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெரிய அளவில் தாக்குதல் நடத்தும்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு இருந்த தகவல் வெளியானது.

மீண்டும் பரபரப்பு

ஈரானை தங்களிடம் சரண் அடைய வைக்கும் நோக்கில் இந்த ராணுவ நடவடிக்கை இருக்கும் என கூறப்பட்டது. இதனால், மேற்காசிய பகுதிகளில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஈரான் மீது நடத்த இருந்த தாக்குதல் ரத்து செய்யப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என டிரம்ப் கூறினார். எங்களுடன், இந்த தாக்குதலை நிறுத்தும் முடிவில் இஸ்ரேல் நாடும் இணைந்துள்ளது என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com