ஈரானின் அணு உலைகள் அழியவில்லை; அமெரிக்க செய்தி நிறுவனங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு

ஈரானின் அணு உலைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் நன்றாகவே உள்ளன என்று அமெரிக்க செய்தி நிறுவனங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வாஷிங்டன் டி.சி.,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு நடத்திய தொடக்க மதிப்பீட்டில் தாக்குதல்கள் தற்காலிக பாதிப்புகளையே ஏற்படுத்தியது. இதனால், ஈரான் ஒரு சில மாதங்களே அணு திட்டத்தில் ஈடுபட முடியாமல் போகும் என்ற வகையில் தெரிவித்து இருந்தது.
ஈரானின் அணு உலைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் நன்றாகவே உள்ளன என்றும் செறிவூட்டப்பட்ட யுரேனிய பொருட்கள் முன்பே பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் நடந்த ராணுவ தாக்குதல் வெற்றி என டிரம்ப் கூறி வந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணு உலைகள் அழியவில்லை. அவை பாதுகாப்பாக உள்ளன என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






