

கோ கில்டாரே
அயர்லாந்து நாட்டில், எதிர் திசையில் கார் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர்.
அயர்லாந்து நாட்டின் கோ கில்டாரே பகுதியில் எம்9 சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென பயண திசையில் இருந்து விலகி, எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த 2 வாகனங்களும் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்து போய் விட்டன. இந்த சம்பவத்தில், ஒரு வாகனத்தில் பயணித்த ஆண்கள் 5 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.
இதுபற்றி கர்டா பகுதிக்கான ஆணையாளர் ஜஸ்டின் கெல்லி கூறும்போது, விபத்தில் பலியான 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாஸ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என்றார்.
இதேபோன்று மற்றொரு வாகனத்தில் பயணித்த 3 பெண்கள், ஆண் குழந்தை ஒன்று என 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் 30 வயதும், ஒருவர் 20 வயதும் உடையவர் ஆவர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.