

பெய்ரூட்,
ஜெருசேலம் நகரின் புறநகர் பகுதியில் பெண் போலீஸ் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பெற்றுள்ளது. இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித இடமாக கருதப்படும் அல் அக்சா மசூதி இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேமில் உள்ளது. வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று அங்கு கிழக்கு மற்றும் மேற்கு ஜெருசலேமில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தியால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த பெண் போலீஸ் அதிகாரி, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இதுதான் முதல் தடவையாகும். இந்த தாக்குதல் இறுதியானது இல்லை எனவும் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தொனியில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.