

நியூயார்க்,
ஈரானுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக அறிவித்த நிலையில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் இன்று அறிவித்தார்.
இந்நிலையில், ஈரானுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், ’ஈரானுடன் விரைவில் உடன்படிக்கை ஏற்படும். சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். ஹார்முஸ் நீரிணை பாதை விரைவில் திறக்கப்படும். ஈரான் மீது நடைபெறும் தாக்குதல் ராணுவ நடவடிக்கையே தவிர போர் அல்ல. ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என உத்தரவாதம் அளித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் சேர்ந்து ஹார்முஸ் நீரிணை பாதுகாப்போம் ’ என்றார். இதனைத்தொடர்ந்து, ஈரான் - அமெரிக்க போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.