

காபுல்,
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளும் சண்டையிட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் ஆப்கான் ராணுவம் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் சேர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கன் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சயத் ஓர்க்சாய் கொல்லப்பட்டார். மேலும், 10 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு இயக்குனர் கோக்யானி தெரிவித்தார்.
இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா, மற்றும் பிற பிராந்திய, சர்வதேச பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா தனது பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை தொடர்ந்து வருவதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.