

டாக்கா,
வங்காளதேச தலைநகர் டாக்காவில் வாரி பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ ராதாகாந்தா ஜியோ மந்திர் என்ற கோவில் உள்ளது. இஷ்கான் அமைப்பு இந்த கோவிலை நிர்வகித்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலையில், வங்காளதேசத்தின் தந்தை முஜிபுர் ரகுமான் 102-வது பிறந்தநாளையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்றனர்.
அப்போது, 3 லாரிகளில் சுமார் 100 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. கோவில் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. உடனே பக்தர்கள் அலறியடித்து ஓடினர். கோவில் செயலாளர் ருபானு கவுர் என்பவரை அடித்து, பக்கத்தில் உள்ள மசூதிக்கு தூக்கி சென்றனர்.
கோவிலில் உள்ள சரஸ்வதி சிலை, தகர கூரை ஆகியவற்றையும் சேதப்படுத்தினர். கோவில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து வாரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் வழக்கு பதியவில்லை. அதை கண்டித்து, இந்து அமைப்புகள் சார்பில் தேசிய பிரஸ் கிளப் முன்பு நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.