ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை இன மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் 19 பேரை பலி கொண்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு இன்று பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை இன மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்து பேசுவதற்காக ஜலாலாபாத் நகரில் உள்ள ஆளுநரின் இல்லத்திற்கு சிறுபான்மை இன மக்கள் சிலர் ஒரு குழுவாக நேற்று பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சீக்கிய சமூகத்தின் நீண்ட கால தலைவரான அவ்தார் சிங் கல்சா என்பவர் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று பொறுப்பேற்று உள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், பல தெய்வங்களை வழிபடும் குழு ஒன்றை நாங்கள் குறிவைத்தோம் என தெரிவித்துள்ளது.

பழமைவாதம் நிறைந்த முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் வேற்றுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அவர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். கடந்த 1970ம் ஆண்டுகளில் 80 ஆயிரம் என்ற அளவில் இவர்களின் எண்ணிக்கை இருந்துள்ளது. ஆனால் அவர்கள் தற்பொழுது 1,000 என்ற அளவிலேயே உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com