

ஜெருசலேம்,
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீப நாட்களாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தன. குறிப்பாக, ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதிக்கு அருகே நடந்த மோதலில் சுமார் 500 பாலஸ்தீனர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் போலீசாரின் இந்த வன்முறையை கண்டித்து, ஹமாஸ் போராளிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ராக்கெட் ஒன்றை வீசினர்.
எனினும், இஸ்ரேலில் வான்பாதுகாப்பு அமைப்பு அந்த ராக்கெட்டை நடுவானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. காசாவில் ஹமாஸ் போராளிகளின் ஆயுத உற்பத்தி தளத்தை குறிவைத்து, இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வான்தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.