

பெய்ரூட்
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது.
லெபனானின் தெற்கே ஹிஸ்புல்லா பயங்கரவாத உள்கட்டமைப்பை நிறுவும் முயற்சில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், பயங்கரவாத சதி திட்டங்களை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு கருவிகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களையும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்கி வீழ்த்தி வருகின்றனர். அந்த பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு, விட்டு உயிர் தப்புவதற்காக குடும்பத்துடன் வேறு இடங்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கு ஆகும். லெபனானில் ஏற்கனவே அதிக அளவில் அகதிகள் உள்ளனர். இந்நிலையில், இருக்கின்ற மக்களும் தஞ்சம் தேடி வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் மற்றும் ராணுவ நடவடிக்கை போன்றவற்றால் உடனடி அச்சுறுத்தலுக்கான சூழல் எழுந்துள்ளது. இதனால், அச்சமடைந்துள்ள மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். லெபனானின் தெற்கில் ஷியா பிரிவினர் அதிகம் வசித்து வரும் நிலையில், அவர்களை வெளியேறும்படி கூறி வருவதுடன், தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இதேபோன்று தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஷியா பிரிவினரையும் வெளியேற்றும் முடிவில் இஸ்ரேல் உள்ளது. இது லெபனானின் மொத்த பிராந்தியத்தில் 15 சதவீதம் ஆகும்.
2024-ம் ஆண்டு நவம்பரில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியது. ஆனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.