லெபனானில் நள்ளிரவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
லெபனானில் நள்ளிரவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
Published on

பெய்ரூட்,

காசாவுக்கு எதிராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்கா தலைமையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், லெபனான் நாட்டின் தெற்கே பின்ட் பெய்ல் நகர் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் நள்ளிரவு தொடங்கி கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளன.

போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லெபனானின் என்.என்.ஏ. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், டிரோன் தாக்குதலில் மோட்டார் சைக்கிள், வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. 2 பேர் காயமடைந்தனர் என தெரிவித்து உள்ளது.

இதில், 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி ஆனார்கள். அவர்கள் செலின், ஹதி மற்றும் அசீல் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்களும், அவர்களுடைய தந்தையும் அமெரிக்க குடிமக்கள் ஆவர். இந்த தாக்குதலில், அவர்களுடைய தாயார் காயமடைந்து உள்ளார்.

அந்நாட்டின் சபாநாயகர் நபி பெர்ரி இதனை உறுதி செய்துள்ளார். ஆனால், இஸ்ரேல் வெளியிட்ட செய்தியில், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும், ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார் என தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com