பாலஸ்தீன மசூதிகளுக்கு இஸ்ரேலியர்கள் தீ வைப்பு - 2 பேர் கைது

மசூதி சுவரில் ஹீப்ரு மொழியில் 'பழிவாங்குதல்' என்று எழுதிவிட்டு தப்பியோடினர்.
மசூதிகளுக்கு இஸ்ரேலியர்கள் தீவைப்பு
Published on

ஜெருசலேம்,

மேற்குக்கரை பகுதியில் உள்ள இரண்டு பாலஸ்தீன மசூதிகளுக்கு இஸ்ரேலிய தீவிரவாதிகள் தீ வைத்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர மோதல்

கடந்த ஜூலை 24-ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 4 பாலஸ்தீனியர்களும், 2 இஸ்ரேலிய வீரர்களும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மசூதிகள் தீக்கிரை

இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில், நேற்று அதிகாலையில் இஸ்ரேலியர்கள் ஆயுதங்களுடன் பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்தனர். அங்கு வெறித்தனமாக தாக்குதல் நடத்திய அவர்கள், குஸ்ரா மற்றும் கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்கு தீ வைத்தனர்.

பழிவாங்குதல்

இதில் மசூதியின் உட்புறங்கள் கொழுந்துவிட்டு எரிந்து நாசமாகின. மேலும், அங்கிருந்த பாலஸ்தீனியர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். அதன் சுவர்களில் ஹீப்ரு மொழியில் "பழிவாங்குதல்" என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடினர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மசூதிக்கு தீ வைத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 இஸ்ரேலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மேற்குக்கரை பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, போர் பதற்றம் நிலவி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com