பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து

இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவருடைய தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றுக்காக பிரதமர் மோடிக்கு மெலோனி புகழாரம் சூட்டியுள்ளார்.
ரோம்,
பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவருடைய தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றுக்காக பிரதமர் மோடிக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவருடன் செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இதுபற்றி மெலோனி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 75-வது பிறந்த நாள் வாழ்த்துகள்.
அவருடைய வலிமை, மனவுறுதி மற்றும் கோடிக்கணக்கான மக்களை வழிநடத்தி செல்லும் திறமை ஆகியவை ஊக்கம் ஏற்படுத்த கூடியவை.
இந்தியாவை ஒளி நிறைந்த வருங்காலத்திற்கு தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும் மற்றும் நம்முடைய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இன்னும் வலுப்படுத்தவும் தேவையான ஆரோக்கியம் மற்றும் சக்தியை அவர் பெற, நட்புணர்வு மற்றும் மதிப்பு ஆகியவற்றுடன், நான் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.
அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 17-ல், குஜராத்தின் சூரத் நகரில் இந்த முறை, நகரிலுள்ள 6 ஆயிரம் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் திட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது.






