இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம்

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம்

இத்தாலியில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஐந்து பிராந்தியங்களில் வறட்சி ஏற்பட்டது.
Published on

ரோம்,

இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள லோம்பார்டி, எமிலியா-ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய 5 வடக்கு பிராந்தியங்களில் இத்தாலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவசர நிலை தற்போதைய சூழ்நிலையை அசாதாரண வழிமுறைகள் மற்றும் அதிகாரங்களுடன் நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைமை சீரடையாத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com