

டோக்கியோ,
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள சுரங்க ரெயில் பாதையில் கடந்த 1995ம் ஆண்டு தொடர்ச்சியாக சரீன் என்ற நரம்பினை தாக்கும் தன்மை கொண்ட விஷ வாயுவை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விஷ வாயு நாஜி படையினரால் பயன்படுத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 5,800 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் நிரந்தரமுடன் முடங்கி விட்டனர். இது அந்நாட்டின் பொது பாதுகாப்பு பற்றிய வரலாற்றை சிதறடித்து விட்டது.
இந்த தாக்குதலை ஆம் ஷின்ரிகியோ என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இந்த அமைப்பு புத்த மதம் மற்றும் இந்து மதத்தின் தியான முறைகளை கலந்து கற்று கொடுக்கும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு இருந்தது.
இந்நிலையில், விஷ வாயு தாக்குதலில் ஈடுபட்ட அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் சிஜுவோ மேட்சுமோட்டோ உள்பட 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் சிஜுவோ மற்றும் பிற உறுப்பினர்கள் 6 பேருக்கு கடந்த 6ந்தேதி தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர்களில் மீதமிருந்த 6 பேர் இன்று தூக்கில் போடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர்.