உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கான தடையை நீக்கியதற்காக ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த ஜப்பான் பிரதமர்

தனது கோரிக்கையை ஏற்று உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கான தடையை நீக்கியதற்காக ஜோ பைடனுக்கு யோஷிஹிடே சுகா நன்றி தெரிவித்தார்.
உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கான தடையை நீக்கியதற்காக ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த ஜப்பான் பிரதமர்
Published on

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த குவாட் உச்சி மாநாடு, வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது. முன்னதாக குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

பின்னர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார். இதையடுத்து குவாட் உச்சி மாநாடு நடைபெறும் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறைக்கு ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி, பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகிய நால்வரும் சென்றனர். இதனை தொடர்ந்து குவாட் உச்சி மாநாடு தொடங்கியது.

அப்போது ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா பேசியதாவது;-

2011 புகுஷிமா அணுசக்தி பேரழிவுக்குப் பிறகு ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று தடையை நீக்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சந்திப்பு நான்கு நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளை பிரதிபலிக்கிறது. குவாட் என்பது இந்தோ-பசிபிக் சுதந்திரமாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கருதும், அடிப்படை உரிமைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள 4 நாடுகளின் முக்கியமான முயற்சியாகும். இன்றுவரை, பிராந்திய சவால்கள் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அதன் முழுமையான ஒத்துழைப்பை குவாட் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

இந்த உச்சிமாநாடு எங்கள் நான்கு நாடுகளும் பகிர்ந்து கொண்ட உறவுகளையும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.

இவ்வாறு பிரதமர் யோஷிஹிடே சுகா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com