உக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் - ஜெலன்ஸ்கியிடம் புமியோ கிஷிடா உறுதி

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
உக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் - ஜெலன்ஸ்கியிடம் புமியோ கிஷிடா உறுதி
Published on

கீவ்,

உக்ரைன் மீதான ரஷிய போர் ஒரு ஆண்டை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஆயுதம் சப்ளை, பொருளாதார ஆதரவு உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தன. மேலும் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டம் ஒன்றை சீனா அண்மையில் வெளியிட்டது. மேலும் இந்த அமைதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷியா சென்றார்.

இந்த பயணத்தில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினை ஜின்பிங் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜின்பிங் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் பயணமாக உக்ரைனுக்கு சென்றார்.

அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த புமியோ கிஷிடா பிரதமர் மோடியை சந்தித்து பேசிய சில மணி நேரங்களுக்கு பின்னர் உக்ரைனுக்கு சென்றுள்ளார். விமானம் மூலம் போலந்து சென்றடைந்த அவர், ரெயிலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அங்கு அவரை அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார்.

தொடர்ந்து இருவரும் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜெலன்ஸ்கியிடம் புமியோ கிஷிடா உறுதி அளித்தார்.

ஜப்பான் உக்ரைனுக்கு இதுவரை 7 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.57 ஆயிரம் கோடி) மதிப்பிலான ராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைனுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com