

புதுடெல்லி
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் இன்று (ஜூலை 1) முதல் 3-ந்தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், குறைகடத்திகளுக்கான உறுதியான விநியோக சங்கிலிகளை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய விசயங்கள் அவருடைய இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.
புதுடெல்லியில் நாளை நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், தகாய்ச்சியும் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த உச்சிமாநாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர், தலைவர்கள் இருவரும், பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிடுவார்கள். இந்த சந்திப்பின்போது இரு தரப்பிலும் 10 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, கூட்டு பொருளாதார மன்றத்திலும் தகாய்ச்சி கலந்து கொள்ள உள்ளார்.