

காபூல்,
தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கிற ஆப்கானிஸ்தானில், தலைநகர் காபூலில் ஒரு பண பரிமாற்ற சந்தை இயங்கி வருகிறது. அங்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த ஒரு கொள்ளையன், கையெறி குண்டை வீசினான். அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.
எனினும், இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தை நேரில் கண்ட வாயிஸ் அகமது என்ற பணபரிமாற்றாளர் கூறும்போது, பண பரிமாற்றாளர்கள் செயல்படத் தொடங்கிய நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என குறிப்பிட்டார். பல மாதங்களுக்கு பிறகு காபூலில் இப்போது குண்டுவெடித்து இருப்பது அங்கு வாழும் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.