

இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது குறித்து ஐ.நா பொது சபையின் சிறுபான்மையினர் பாதுகாப்பு கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் பாகிஸ்தானின் பொருளாதார தலைநகரமான கராச்சியில் உள்ள பல குடியிருப்புகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு யாரும் வீடுகளை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ வேண்டாம் என உருது மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒட்டப்பட்டிருந்த இந்த வாசகத்தை, பாகிஸ்தானைச் சேர்ந்த கபில் தேவ் என்ற சமூக ஆர்வலர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில் பலர் தாங்கள் வீடு கிடைக்காமல் அவதிப்பட்டதாக கூறியிருந்தனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது குறித்து உலக நாடுகள் பல முறை கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, சட்டவிரோதமான கொலைகள், கற்பழிப்பு, கட்டாய மதமாற்றம் ஆகியவை தொடர்பாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பால்தேவ் குமார் தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பெரும் துன்பத்திற்கு உள்ளாவதாகவும் தானும் தனது குடும்பத்தினரும் இந்தியாவில் வசிக்க பிரதமர் மோடி அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.