தொடர்ந்து போராடுங்கள்... உதவி வந்துகொண்டிருக்கிறது; ஈரான் மக்களுக்கு டிரம்ப் ஆதரவு

ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது
தொடர்ந்து போராடுங்கள்... உதவி வந்துகொண்டிருக்கிறது; ஈரான் மக்களுக்கு டிரம்ப் ஆதரவு
Published on

வாஷிங்டன்,

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் 31 மாகாணங்களில் போராட்டம் பரவியுள்ளது.

போராட்டத்தை கமேனி தலைமையிலான அரசு ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில், ஈரானில் போராடி வரும் மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். மேலும், ஈரான் மக்களுக்கு உதவி வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தேசபக்தர்களே தொடர்ந்து போராடுங்கள். உங்கள் அரசை கட்டுப்பாட்டுக்குள் எடுங்கள். கொலைகாரர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களின் பெயர்களை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் அதிக விலை கொடுக்கப்போகிறார்கள். போராட்டக்காரர்களை அர்த்தமற்ற முறையில் படுகொலை செய்வது நிறுத்தப்படும்வரை ஈரான் அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்பையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்து கொண்டிருக்கிறது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com