பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு; பிரபல அர்ஜெண்டினா நடிகை உயிரிழப்பு

சில்வினா லூனா வாரத்திற்கு சுமார் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு; பிரபல அர்ஜெண்டினா நடிகை உயிரிழப்பு
Published on

புவனோஸ் அய்ரெஸ்,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா(43). தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், மாடலாகவும் இருந்து வந்த சில்வினா லூனா, கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட நிலையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் வாரத்திற்கு சுமார் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனிடையே சில்வினாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சில்வினாவின் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாகவே அவருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த அனிபால் லாடாக்கி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. இருப்பினும் பிரபலங்கள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பின்னர், அதன் பக்க விளைவுகளால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் பிரபல அமெரிக்க மாடல் அழகி கிறிஸ்டினா ஆஷ்டன்(34), பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த மே மாதம், பிரபல கன்னட சீரியல் நடிகை சேத்தனா ராஜ், பெங்களூருவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக சேத்தனா ராஜ் உயிரிழந்தாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com