

பியாங்யாங்,
வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதின் 90-வது ஆண்டு தினத்தையொட்டி கடந்த 25-ந்தேதி அந்த நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை நேரில் பார்வையிட்ட பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் வடகொரியா தனது ஆயுத திறனை அதிகவேகத்தில் மேம்படுத்தும் என சூளுரைத்தார்.
இந்த நிலையில் ராணுவ அணிவகுப்பை சிறப்பாக நடத்தியதற்காக மூத்த ராணுவ அதிகாரிகளை கிம் ஜாங் அன் நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசுகையில், வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்துவோம் என கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விரோத சக்திகளிடமிருந்து அதிகரித்து வரும் அணுஆயுத அச்சுறுத்தல்கள் உள்பட, அனைத்து ஆபத்தான முயற்சிகளையும், அச்சுறுத்தும் நகர்வுகளையும் முழுமையாக கட்டுப்படுத்தி, தோல்வியடைய செய்ய வடகொரியா தனது அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்த தயங்காது என்றார்.