அரசர் சார்லஸ், இளவரசி டயானா திருமண கேக்கை ஏலம் விட முடிவு

அரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா திருமணத்திற்காக தயாரிக்கப்பட்ட 41 ஆண்டுகள் பழமையான கேக் ஒன்று ஏலத்திற்கு விடப்பட உள்ளது.
அரசர் சார்லஸ், இளவரசி டயானா திருமண கேக்கை ஏலம் விட முடிவு
Published on

லண்டன்,

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின் அரசரான மூன்றாம் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா இருவருக்கும் 1981-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி திருமணம் நடந்தது. இதனை லட்சக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி வழியே கண்டு களித்தனர். அதனை நூற்றாண்டின் திருமணம் என்றும் அழைத்தனர்.

எனினும், இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. சட்டப்படி விவாகரத்து பெற்றவர்களாக ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.

அவர்களது திருமணத்தின்போது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் நைஜல் ரிக்கட்ஸ். கடந்த ஆண்டு நைஜல் காலமானார். அவர், இந்த திருமணத்தின்போது தயாரிக்கப்பட்ட 41 ஆண்டுகள் பழமையான திருமண கேக்கின் ஒரு பகுதியை பாதுகாத்து வைத்திருக்கிறார்.

அதனை தற்போது ஏலத்திற்கு விட முடிவு செய்துள்ளனர் என நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் டோர் மற்றும் ரீஸ் ஏல அமைப்பு சார்பில் இந்த கேக் ஏலத்திற்கு விடப்படும்.

கேக் துண்டின் ஏல மதிப்பு 300 இங்கிலாந்து பவுண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ரூ.27 ஆயிரத்திற்கும் கூடுதலானது. இதனை விட அதிக தொகைக்கு ஏலத்திற்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருமணத்திற்காக 23 கேக்குகள் அப்போது தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பழகேக் ஒன்றின் மைய பகுதியில் இருந்து இந்த கேக் துண்டு வெட்டி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த கேக் 5 அடுக்குகளாக 5 அடி உயரம் கொண்டது.

இதேபோன்ற மற்றொரு கேக் துண்டு 2014-ம் ஆண்டில் 1,375 இங்கிலாந்து பவுண்டு மதிப்புக்கு, இந்திய மதிப்பில் ரூ.1.27 லட்சம் (தற்போதுள்ள மதிப்பு) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com