

டொரான்டோ
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் ரேச்சல் ஆல்பர்ட். கனடாவின் டொரான்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் சப்ளை செய்ன் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர் ரேச்சலை கத்தியால் குத்தியுள்ளார். அதில் ரேச்சலுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்துள்ளார். கத்தியால் குத்திய நபர் அதோடு நிற்காமல் ரேச்சலை சிறிது தூரம் இழுத்துச் சென்று வீசிவிட்டு தப்பித்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ரேச்சல் தற்போது டொரான்டோவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரேச்சலின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரேச்சல் தாக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் தற்போது கனடாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே, கனடாவில் தமிழக மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரேச்சலின் குடும்பத்தினர் கனடா செல்வதற்கான விசா உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்றோ அல்லது நாளையோ அவரது குடும்பத்தினர் கனடா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேச்சல் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் டொரான்டோ காவல்துறை, தாக்குதல் நடத்தியவர் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர் என்றும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
கல்வி உதவித் தொகை மூலம் படித்து வந்த ரேச்சல் வரும் மே மாதம் பட்டம் பெற இருந்தார். தனது செலவுகளுக்காக கனடாவிலேயே பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே அவர் படித்து வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரேச்சலின் தந்தை கூறியதாவது:- கடந்த வாரம் ரேச்சல் தமது சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது எந்த சம்பவத்தை எதனோடு தொடர்புபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை என கூறி உள்ளார்.