

லண்டன்
நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய நீட் தேர்வு, ஒரு சிலரின் முறைகேடான செயல்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டையும் ‘நீட்’ விட்டு வைக்கவில்லை. இதனால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த நீட் நம் நாட்டுடன் தொடர்புடையது அல்ல. இதுதொடர்பாக அந்நாட்டில் வெளியான அறிக்கையில், இங்கிலாந்து நாட்டில் 16 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சி இல்லாமல் இருக்கின்றனர்.
அப்படி ‘வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சி இல்லாமல்’ என்ற விசயங்களை குறிக்க ஆங்கிலத்தில் நீட் (Neet) என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, நாட்டில் இந்த வகையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இது பொருளாதார நெருக்கடியை விட அதிகம் பாதிப்பை ஏற்படுத்த கூடியது என்று ஆய்வு நடத்திய ஆலன் மில்பர்ன் தெரிவித்து உள்ளார். இதனால், ஆண்டுக்கு 16 லட்சத்து 8 ஆயிரத்து 581 கோடி (12,500 கோடி பவுண்டு) இழப்பு ஏற்பட்டு உள்ளது என மதிப்பிடப்பட்டு உள்ளது.