

கொழும்பு,
இலங்கை தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் இலங்கை காவல்துறை மற்றும் ராணுவ தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரும் விடுபடவில்லை. குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் முப்படை தளபதிகள் மற்றும் காவல்துறை தலைவர் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இலங்கையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், பயங்கரவாதிகள் வசம் இருந்த அனைத்து வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும், தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர். அதேவேளையில், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை.
இலங்கையில், கடந்த திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கையை வழக்கம் போல் துவங்க வேண்டும் என்று ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.