இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பயன்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிப்பு

இலங்கையில் ஈஸ்டர் அன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்துவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட பயிற்சி மையம் இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #Srilankablasts
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பயன்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிப்பு
Published on

கொழும்பு,

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ஒரே நாளில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) மற்றும் ஜமாதி மிலாது இப்ராகீம் என்ற பிரிவினைவாத குழு மீது அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. தொடர்ந்து, அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த வாரம் இந்த இரு அமைப்புகளையும் தடை செய்து உத்தரவிட்டார்.

இந்த தற்கொலை தாக்குதல் ஜஹ்ரான் தலைமையில் ஷாங்ரி லா ஓட்டலில் நடத்தப்பட்டு உள்ளது. ஜஹ்ரானுடன் சென்ற அகமது இப்ராகிம் ஓட்டலின் உள்ளே வெடிகுண்டை வெடிக்க செய்து பலியானான்.

இலங்கையில் மொத்தம் 9 பேர் நடத்திய இந்த தாக்குதல்கள் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்திற்குரிய என்.டி.ஜே. உறுப்பினர்களிடம் நடந்த விசாரணையில், நுவாரா எலியா என்ற நகரில் உள்ள பிளாக்பூல் பகுதியில் 2 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் பயிற்சி மையம் ஒன்று வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. இந்த மையத்தில், தாக்குதல்கள் நடத்துவதற்கு முன் ஜஹ்ரான் உள்ளிட்ட 38 பேர் பயிற்சி பெற்றிருக்க கூடும் என நம்பப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின் முடிவில், ஈஸ்டர் பண்டிகைக்கு 4 நாட்களுக்கு முன் கடந்த ஏப்ரல் 17ந்தேதி கடைசியாக ஜஹ்ரான் கலந்து கொண்ட இறுதி பயிற்சி கூட்டம் நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் தற்கொலை பயங்கரவாதிகள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com