

வாஷிங்டன்
அமெரிக்க ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக இருப்பவர் லார்ரி நாசர் (54). டாக்டர் ஆக இருக்கிறார். இவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியில் டாக்டராக பணிபுரிந்தார்.
அப்போது இவர் தன்னிடம் உடல் பரிசோதனைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து அவர்களை நிர்வாண படம் எடுத்து சித்ரவதை செய்ததாக புகார்கள் வந்தன. இவர் மீது மிச்சிகன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனியும் ஒருவர் ஆவார்.
நீதிமன்றத்தில் லார்ரியால் பாதிக்கப்பட்ட 156 பெண்கள் சாட்சி கூறியுள்ளது அமெரிக்க வையே அத்ர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சாட்சி அளித்த 156 பெண்களில் 2000-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜேமியும் அடக்கம். லாரிக்கு எதிராக பெண்கள் சாட்சி கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சாட்சி கூறிய பெண்களில் சிலர் பேசியது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. அவற்றில் சிலரின் சாட்சியங்கள் பின்வருமாறு..
''லார்ரி என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியபோது எனக்கு வயது 6. எங்கள் குடும்ப நண்பரான லார்ரி மீது என் பெற்றொர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். லாரி என்னிடம் தவறாக நடந்துகொண்டதைப் பற்றி என் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. எனக்கு நடந்தது என்ன என்பதை சரியாக சொல்லவும் தெரியவில்லை. ஆனால், இப்போது நான் வலிமையான பெண்ணாக வந்து நிற்கிறேன். எனக்கு நடந்ததை விவரிக்கிறேன்.''
மெகய்லா மரோனி கூறும் போது
''என் வாழ்க்கையில் இருண்ட நாள் அது. எனக்கு அப்போது 15 வயது. போட்டியில் பங்குபெற டோக்கியோவுக்கு விமானத்தில் சென்றேன். எங்களுடன் மருத்துவர் லார்ரியும் வந்திருந்தார். மறுநாள் காலை நான் கண்விழித்தபோது ஒரு தனி அறையில் லார்ரி அருகில் இருந்தேன். பிறகுதான் அவர் எனக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. நான் கண்விழித்தபோது இறந்துவிடுவேன் என்று நினைத்துப் பயந்தேன். லார்ரி, சிறுமிகளை சீரழித்த சாத்தான். என் மனதில் என்றும் மறக்க முடியாத ரணங்களை கொடுத்த சாத்தான்''.
''நான் லார்ரியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண். ஆனால், என்னை நான் அப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் ஒலிம்பிக் வீராங்கனை. 'Victim' கிடையாது. எங்கள் அனைவருக்கும் நேர்ந்த இந்த கொடுமைக்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பே பொறுப்பேற்க வேண்டும். இனி இப்படி நடக்கக் கூடாது.'' என கூறினார்.
இப்படியாக ஒவ்வொருவரின் சாட்சியங்களும் ஆழமாக அழுத்தமாக இருந்தது. இதையடுத்துப் பேசிய நீதிபதி ரோஸ்மரின் 'லாரி உன்னை தண்டிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். உனக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கிறேன். இனி நீ சிறைக்கு வெளியே வரக் கூடாது. நீ சிறைக்கு வெளியே வாழத் தகுதியற்றவன். நான் உன் மரணத்துக்கு கையெழுத்திடுகிறேன்' என்று கூறி தீர்ப்பு நகலில் கையெழுத்திட்டார்.