

உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது? உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வின்படி உலகின் பெருநகரங்களாகிய பெய்ஜிங் மற்றும் புது டில்லியை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஈரான் நாட்டின் ஒரு நகரம் அதிக மாசுபாட்டுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
காற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவைப் பொறுத்து காற்று மாசுபாட்டை விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர். முதலாவதாக மனிதனின் தலைமுடியில் 30ல் ஒரு பங்கு அளவுவில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக்கூடிய PM2.5 என்ற மாசு துகள்களில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் இவ்வகை துகள்கள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பதாகும். அத்துடன் நமது நுரையீரல்கள் மற்றும் இரத்தக் குழாய்களுக்குள் நுழையும் திறன்பெற்றது, இந்த PM2.5 துகள்கள், இதனால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுத்துகின்றன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) PM2.5 தரவைப் பார்த்தால், ஈரானிய நகரமான ஷபோல் முதலிடம் பிடித்துள்ளது. 100,000 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் ஈரானின் கிழக்கில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, இங்கு வருடத்துக்கு சுமார் 120 நாட்கள் மணல் புயல் வீசும்.
இந்தியாவின் குவாலியர் மற்றும் அலஹாபாத் ஆகிய இரு நகரங்களும் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாட் நான்காவது இடத்தில் உள்ளது. புது தில்லி 11வது இடத்திலும், சீன தலைனகர் பெய்ஜிங் 57வது இடத்திலும் உள்ளது.
அடுத்ததாக காற்றில் உள்ள பெரிய துகள்களை வைத்து காற்றுமாசுபாட்டை அளவிடுகின்றனர், PM10 எனப்படும் பெரியவகை மாசு துகள்களாக இருந்தாலும் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப்பட்டு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.PM10 எனும் மாசு துகளின் தரவு அடிப்படையில் பார்த்தாலும் ஷபோல் நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது, இந்த தரவரிசையின்படி டெல்லி 25வது இடத்திலும், பெய்ஜிங் 125வது இடத்திலும் உள்ளது.
ஐந்து வயதிற்கு உட்பட்ட 4.7 கோடி குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 55 கோடி மக்கள், 2016 ஆம் ஆண்டில் தேசிய தரத்திற்கு மேலான நுண்ணளவை அளிக்கும் மாசுபட்ட நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர் என இந்திய பசுமை வாரியம் குறிப்பிட்டு உள்ளது.