குலசேகரபட்டினத்தில் குறைந்த செலவில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தலாம்: மயில்சாமி அண்ணாதுரை

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் இந்திய அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ‘‘குலசேகரபட்டினத்தில் குறைந்த செலவில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தலாம்’’ என்று பேசினார்.
குலசேகரபட்டினத்தில் குறைந்த செலவில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தலாம்: மயில்சாமி அண்ணாதுரை
Published on

துபாயில் மயில்சாமி அண்ணாதுரை

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் விண்வெளி வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (இடென்) சார்பில் இந்திய அரங்கில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையை அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பில், ஏ.எஸ்.பி.ஏ மேனேஜ்மென்ட் கன்சல்டன்சியின் தலைவர் ஆடிட்டர் பிரின்ஸ் என்கிற இளவரசன் வரவேற்று பூச்செண்டு கொடுத்து பொன்னாடை அணிவித்தார்.

அதனை தொடர்ந்து வருகை புரிந்த இந்திய துணைத்தூதரக அதிகாரி காளிமுத்துவையும் அவர் வரவேற்றார். பின்னர், தமிழில் வீடியோவை திரையில் காட்சிப்படுத்தி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-

300-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள்

மிஷன் மங்கள்யான் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் எப்படி விண்வெளித்துறை மற்ற துறைகளுடன் இணைந்துள்ளது என்பதை பார்க்கலாம். நீங்கள் பார்த்த வீடியோ காட்சியில் ஒரு சிறுவன் செய்தித்தாளில் நிலவில் மனிதன் காலடி பதித்த காட்சியை பார்க்கலாம். அதுதான் என்னிடம் ஒரு விதையை விதைத்தது. இன்றைய உலக செயல்பாடுகள் மாறிக்கொண்டு உள்ளது. அரசு கொள்கைகள் மாறிக்கொண்டு இருக்கிறது. இந்திய விண்வெளித்துறை அமெரிக்க, ரஷிய நாடுகளுக்கு போட்டியாக உள்ளது.

ஒரு காலத்தில் இந்தியா நிலவை அடைய முடியாது என்ற கருத்தை சந்திராயன் பொய்யாக்கியது. மேலும் அதன் தகவல்கள் உலகத்திற்கு புதிய தகவல்களை வழங்கியது. வெளிநாடுகளுக்காக இந்தியா 300-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. இந்தியாவிற்கும் தேவையான தொலைதூர மருத்துவம், கல்வி உள்ளிட்ட சேவைகளை விண்வெளித்துறை செயல்படுத்தி வருகிறது.

திருச்சி, சேலத்திலும் ஏவுதளங்கள்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அடுத்த ராக்கெட் ஏவுதளமாக உருவெடுத்துள்ளது. இந்த ஏவுதளத்தில் குறைந்த செலவில் ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியும்.

பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் செலவில் 3-ல் ஒரு பங்கு மட்டுமே செலவாகும். அதாவது ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் செலவில் 3 செயற்கைக்கோள்களை ஏவலாம். இதில் கூடுதலாக திருச்சி, சேலத்திலும் அமைக்கப்படும் எதிர்கால ஏவுதளங்கள் மூலம் தொழில்முனைவோருக்கு பல்வேறு வர்த்தக வாய்ப்புகளும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பிளாக் துலீப் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எஹியா, பெருமாள் பூக்கடை உரிமையாளர் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமீரகத்தில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அமீரக தமிழ்தொழில்முனைவோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com