

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாக கூறி இந்த தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் கூறுகையில், “ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும்” என்றார். இதற்கேற்ப, அமெரிக்க வீரர்களும் தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது: “ஈரானின் மூத்த ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் தலைநகர் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தினோம்” என்று கூறியுள்ளார். மேலும் வீடியோ ஒன்றையும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.