டிரம்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு

டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்திற்கு பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
டிரம்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து அவரை அதிபர் பதவியில் இருந்து 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் முயற்சித்தனர். ஆனால், அதிபர் டிரம்பை 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார். இதனால், ஜனநாயக கட்சியின் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை மூலம் டொனால்டு டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். டிரம்பின் குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து டிரம்பிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அமெரிக்க அதிபர் வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் முதல் அதிபர் என்ற சோகமான சாதனையை டிரம்ப் பெற்றுள்ளார்.

தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com