

கோலாலம்பூர்,
எம்.எச்.370 என்னும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றபோது மாயமாகி விட்டது. அந்த விமானத்தை தேடும் பணி, இதுவரை இல்லாத அளவுக்கு 160 மில்லியன் டாலர் செலவில் (சுமார் ரூ.1,040 கோடி) 3 ஆண்டுகள் நடத்தப்பட்டது. ஆனாலும் அதை கண்டுபிடிக்க முடியாமல், அதைத் தேடும் பணி கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகி விட்டதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், விமானத்தின் சேத பாகங்களை கண்டறிய மீண்டும் தேடும் பணியை துவங்குவதற்கு மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய பெருங்கடல் கடல்பரப்பில் இந்த தேடுதல் வேட்டை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம், அமெரிக்காவை மையமாக கொண்ட ஒரு நிறுவனம், தென் இந்திய பெருங்கடல் பகுதிக்கு தேடும் பணிக்காக கப்பல் ஒன்றை அனுப்பியுள்ளது. #MH370