

மாலே,
இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ள குட்டித் தீவு நாடு மாலத்தீவு. கடந்த சில மாதங்களாக இங்கு அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவி வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் மாலத் தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாலத் தீவு ஜனநாயக கட்சி தலைவர்களில் ஒருவரான 54 வயது இப்ராகிம் முகமது ஷோலி நிறுத்தப்பட்டார்.
இந்த தேர்தல் முடிவுகளில் மக்களின் மனநிலை அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக வெளிப்பட்டது. பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டபோது எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராகிம் முகமது 1 லட்சத்து 34 ஆயிரத்து 616 ஓட்டுகளும் (58.3 சதவீதம்), அதிபர் அப்துல்லா யாமீனுக்கு 96 ஆயிரத்து 132 ஓட்டுகளும் (41.7 சதவீதம்) கிடைத்து இருந்தது. இப்ராகிம் முகமது அபார வெற்றி பெற்று இருந்தார்.டெலிவிஷனில் தோன்றி பேசிய அதிபர் அப்துல்லா யாமீன் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சிக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் அகமது மஹ்லூப் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் முகமது சோலீ வெற்றி பெற்றதாகவும், தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.
எனினும், மாற்று வழியில் தனது அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அவர் திட்டமிட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும், அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது அவரது கட்டுப்பாட்டில் உள்ள உளவுத் துறையிடமிருந்து அறிக்கையைப் பெற்று வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை அவர் கேட்டுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறதுஎன்று தெரிவித்தார். இதுதொடர்பாக, மாலத்தீவு அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.