லண்டன் இஸ்கான் உணவகத்தில் தடையை மீறி அசைவ உணவு சாப்பிட்ட நபர்.. அதிர்ச்சி சம்பவம்

சைவ உணவகத்தில் அதிலும் மத நம்பிக்கையை தீவிரமாக பிற்பற்றக்கூடிய இடத்தில் அந்த வாலிபர் செய்த செயலால் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
லண்டன் இஸ்கான் உணவகத்தில் தடையை மீறி அசைவ உணவு சாப்பிட்ட நபர்.. அதிர்ச்சி சம்பவம்
Published on

இஸ்கான் சார்பில் லண்டனில் 'கோவிந்தா' என்ற பெயரில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த உணவகத்தில் தடையை மீறி ஒரு நபர் அசைவ உணவை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், இஸ்கானின் கோவிந்தா உணவகத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர், இது சைவ உணவகமா? என கேட்கிறார். அதற்கு அங்கிருந்த உணவக ஊழியர், ஆம் இது சைவ உணவகம்தான் என்கிறார். அப்போது அந்த நபர், இங்கு அசைவ உணவு இல்லையா, ஒண்ணுமே இல்லையா? என கேட்கிறார். இதற்கு பதிலளித்த ஊழியர், 'ஆம், அசைவ உணவு மட்டுமின்றி வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளும் கிடையாது' என்கிறார்.

உடனே, அந்த நபர் சிரித்துக்கொண்டே தான் கொண்டு வந்த பிளாஸ்டிக் பையில் இருந்து ஒரு பாக்சை எடுத்து அந்த ஊழியர்களின் முன்னால் வைத்து, அதில் இருந்த சிக்கனை எடுத்து உணவகத்திற்குள்ளேயே சாப்பிடத் தொடங்குகிறார். மேலும், அந்த சிக்கனை அந்த ஊழியர்களுக்கும் கொடுக்க முயற்சிக்கிறார்.

சைவ உணவகத்தில் அதிலும் மத நம்பிக்கையை தீவிரமாக பிற்பற்றக்கூடிய இடத்தில் அந்த வாலிபர் செய்த செயலால் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளியே போகும்படி கூறியும் அந்த இளைஞர் கேட்கவில்லை.

இதனை பார்த்த பிற வாடிக்கையாளர்கள், தடையை மீறி அசைவ உணவை சாப்பிடுகிறாயா? என்று கேட்டு, உடனடியாக காவலாளியை அழைத்து, அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத நம்பிக்கையை கெடுக்கும் விதமாக நடந்து கொள்ளலாமா? என்று பலரும் கேள்வி எழுப்பி கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது வேண்டுமென்றே செய்த செயல் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com