ஜப்பான் முன்னாள் பிரதமரை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கொலை சம்பவத்திற்குப் பிறகு ஜப்பானின் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
ஜப்பான் முன்னாள் பிரதமரை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
Published on

டோக்கியோ,

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி நாரா நகர ரெயில் நிலையம் முன்பு தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஷின்சோ அபே, இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அவரை படுகொலை செய்த டெட்சுயா யமகாமி(வயது 45) என்ற நபரை போலீசார் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஜப்பானில் துப்பாக்கி பயன்பாடு தொடர்பாக கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டை உலுக்கியது.

இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு ஜப்பானின் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையில் ஷின்சோ அபேவை கொலை செய்த யமகாமி மீதான விசாரணை நாரா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ஜப்பானில் உள்ள யூனிபிகேஷன் தேவாலயத்திற்கும், ஷின்சோ அபேவுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்தவே இந்த கொலையை அரங்கேற்றியதாக யமகாமி கோர்ட்டில் தெரிவித்தார்.

அதே சமயம், ஷின்சோ அபேயின் மனைவி அகீ அபேவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் யமகாமி தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com