

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கள் அன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலை சல்மான் அபிதி என்ற தீவிரவாதி நடத்தியது தெரியவந்த்து.
இது தொடர்பாக போலீசார் 9 பேர் வரை கைது செய்துள்ளனர். இவர்களில் தீவிரவாதியின் உறவினரும் அடங்குவார்.
நாட்டை உலுக்கிய இத்தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது தீவிரவாதியின் குடும்பம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்திய தீவிரவாதி லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பயிற்சி பெற்றவன் எனவும், பாரீஸ் மற்றும் பிரஸ்சல்ஸ் நகரில் நிகழ்ந்த தாக்குதலுக்கும் இவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மேலும், தீவிரவாதியின் சகோதரரான ஹாசிம் என்பவனுக்கு மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும் எனவும் போலீசார் சந்தேகம் எழுப்பி இவனையும் கைது செய்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் தந்தையான ரமதான் (51) என்பவர் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் எனவும், இந்த அமைப்பிற்கு ஆதரவாக அவர் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்துள்ளார் எனவும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இத்தகவலை தொடர்ந்து தீவிரவாதியின் தந்தையும் லிபியாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், தன்னுடைய மகன் அப்பாவி எனவும், இந்த தற்கொலை படை தாக்குதலுக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ரமதான் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.