

காத்மாண்டு
நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்து உள்ளது. 977 பேரை காணவில்லை.
நேபாள நாட்டின் பெருவெள்ளம் தொடர்பாக பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், இதுவரை வெள்ளத்தில் உயிரிழந்த 469 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 977 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்களில் நேபாள போலீசார் 28 பேர், நேபாள ராணுவத்தினர் 45 பேர், ஆயுத போலீஸ் படையினர் 13 பேர், சுங்க அலுவலக அதிகாரிகள் 15 பேர் மற்றும் குடியுரிமை அலுவலக அதிகாரிகள் 4 பேர் ஆகியோர் அடங்குவர். காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
வெளிநாடுகளில் வசித்து வரும் நேபாள குடிமகன்கள், சொந்த நாட்டுக்கு வந்திருந்தபோது வெள்ளத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 127 ஆகும். தவிர 73 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், மீட்பு பணியில் 7,250 நேபாள போலீசார், 4,200 நேபாள ராணுவத்தினர் மற்றும் 1,845 ஆயுத போலீஸ் படையினர் என மொத்தம் 13,295 பாதுகாப்பு படையினர் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண முகாம்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாள ராணுவத்தின் 6 ஹெலிகாப்டர்கள் உள்பட 15 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. நேபாள பிரதமர் பாலன் ஷா வெள்ளம் பாதித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
நேற்றிரவு 8 மணியளவில் 21 தமிழர்கள் உள்பட 84 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதியில், லெண்டே கோலா ஆறும், பிற சிறிய ஆறுகளும் ஒன்றிணைந்து 'போடேகோஷி' ஆறாக கீழ்நோக்கி பாய்கின்றன.
இந்த ஆற்றில் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.
இந்த நிலையில், நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.
அவர்களை மீட்க தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712 ஆகும்.
இதேபோன்று, நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்கு, +977 985 131 6807 மற்றும் +977 970 910 7500 ஆகிய அவசரக்கால எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பேரிடரை தொடர்ந்து தேசம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என கேட்டு கொண்டார். தயவு செய்து பொறுமையாக இருங்கள். உங்களுடைய மீட்பு, சிகிச்சை, உணவு மற்றும் புகலிடத்திற்கு அரசு முழு பொறுப்பேற்கிறது. இதுபோன்ற பேரிடர் தருணத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவிடம் மீட்பு பணிக்கு உதவும்படி நேபாள அரசு கேட்டு கொண்டுள்ளது.
கடந்த 14 மாதங்களில் 2 முறை லெண்டே கோலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த முறை நேபாள பகுதியில் பனிப்பாறை உடைந்தும், பனிச்சரிவு ஒன்றும் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்று பேரிடர் ஆபத்து குறைப்புக்கான நிபுணர் சன்யால் கூறியுள்ளார்.