டிசம்பரில் நாடு திரும்ப திட்டம்; கோர்ட்டில் சரணடைய தயாராக இருப்பதாக ஹசீனா அறிவிப்பு

வங்காள தேச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது.
ஹசீனா
Published on

டாக்கா,

வங்காள தேசத்தில் 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மற்றும் தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசும், ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

மரண தண்டனை

தற்போது தனது நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்ட வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தனது மூத்த கட்சியினருடன் நாடு திரும்பி அந்நாட்டில் உள்ள கோர்ட்டில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள தனது கட்சியான அவாமி லீக்கின் உறுப்பினர்களுடன் தானும், விருப்பத்துடன் நாட்டிற்குத் திரும்பி கோர்ட்டில் ஆஜராகத் திட்டமிட்டு உள்ளார்.

மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் மீது கொடூரமான அடக்கு முறையை நடத்த உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, கடந்த நவம்பரில் கோர்ட்டில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த ஹசீனா, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.

கைது செய்யலாம்

இது குறித்து ஷேக் ஹசீனா கூறியதாவது:

நான் திரும்பும்போது அவர்கள் என்னைக் கைது செய்யலாம், ஒருவேளை என்னைக் கொல்லவும் கூடும். இருந்தாலும், நான் அங்கு சென்றே ஆக வேண்டும்.

எனது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஒருவேளை மரணம் வந்தால், அது என் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட, அவர்களின் ரத்தம் சிந்தப்பட்ட என் சொந்த மண்ணிலேயே வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com