

வங்கதேசத்தில் தட்டம்மை நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை தட்டமைக்கு 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தட்டம்மை நோய் பரவும் தன்மை கொண்டது என்பதால், அண்டை நாடான இந்தியாவிற்கும் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 1 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இந்நோய் தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி விகிதம் குறைந்ததே இந்த பரவலுக்கு முக்கிய காரணம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தட்டம்மை என்பது மிகவும் வேகமாக பரவும் தீவிர வைரஸ் நோயாகும். இது எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடும். ஆனால் சிறு குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இளம் குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான முக்கிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கு, வாய் அல்லது தொண்டையிலிருந்து வெளியேறும் நீர் துளிகள் மூலம் பரவுகிறது.தொற்று ஏற்பட்ட 10–14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும்.