

பெர்லின்,
ஜெர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் இனி அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விதி 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
முன்னர் போர் போன்ற அவசர சூழ்நிலைகளில் மட்டுமே இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது இது நிரந்தர சட்ட அம்சமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக அமைதியாக இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் போர் முதல் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் பதற்றம் வரை உலகளாவிய பாதுகாப்பு சூழல் காரணமாக, ஜெர்மனி தனது பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது சுமார் 1,84,000 ராணுவ வீரர்கள் உள்ள நிலையில், அதை 2,55,000 ஆகவும், 2035க்குள் 2,70,000 ஆகவும் உயர்த்த ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், திடீரென, 17 வயது முதல் 45 வயது வரையுள்ள ஜெர்மன் ஆண்கள் வெளிநாடு செல்லவேண்டுமானால் அதற்காக அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்னும் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த தகவல் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.