

மின்சாரம் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான குடிநீருக்கு எப்படி பயன்பாட்டிற்கு ஏற்றபடி கட்டணம் செலுத்துகிறோமோ, அதுபோல எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தளங்களும் மீட்டர் அடிப்படையில் வழங்கப்படும் என்று சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சாம் ஆல்ட்மேன் இது தொடர்பாக கூறியதாவது: ஏஐ தொழில்நுட்பமானது இனி வரும் காலங்களில் சிக்கலான மென்பொருளாக இல்லாமல் மின்சாரத்தைப் போல அத்தியாவசியமாக மாறும். தற்போது ஏஐ சேவைகள் சப்ஸ்கிரிப்ஷன்களாக உள்ளன. ஆனால் வரும் காலங்களில் மின்சார மீட்டரைப் போல பயனர்கள் தங்கள் பயன்படுத்தும் கணக்கிற்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வரும். சாமானிய மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தங்கள் தேவைக்கு ஏற்ப ஏஐயைப் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் என்றார்.
வரும் காலங்களில் ஏஐ என்பது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிடும் என்பதே சாம் ஆல்ட்மனின் இந்த கருத்து பிரதிபலிப்பதாக டெக் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.