

உலகின் அதிக எடை கொண்ட மனிதராக கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவைச் சேர்ந்த இளைஞர், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ (41 வயது) என்பவர், கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 600 கிலோ எடையுடன் காணப்பட்டார். இதன் மூலம் உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
அதீத உடல் பருமன் காரணமாக அவரால் கை, கால்களை அசைக்க முடியாமலும், படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். மேலும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்ற நோய்களும் அவரை தாக்கியது. இந்த நிலையில் மருத்துவர் ஜோஸ் அன்டோனியோ காஸ்டனெடா என்பவரின் கண்காணிப்பில் ஜுவான் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜுவான் கடுமையான சிறுநீரகத் தொற்றால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 24-ந்தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.