மெக்சிகோவில் ராணுவ துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 5 பேர் பலி

மெக்சிகோவில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 5 பேர் பலியாகினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை மூண்டது.
மெக்சிகோவில் ராணுவ துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 5 பேர் பலி
Published on

ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோ. இங்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. இந்த கும்பல்களை சேர்ந்தவர்கள் அங்கு ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். ராணுவமும் அவர்களுக்கு தக்கப்பதிலடியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நியூவோ லாரெடோ நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். எனினும் அதிர்ஷ்டவசமாக ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வேனில் வந்த 5 பேர் சாவு

துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை சோதனைக்காக நிறுத்தும்படி ராணுவ வீரர்கள் கூறினர். ஆனால் அந்த வேன் நிற்காமல் ராணுவ வீரர்களை கடந்து சென்றது. அதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் அந்த வேன் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் வேன் சாலையோரமாக மோதி நின்றது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அங்கு சென்று பார்த்த போது வேனில் இருந்த 5 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். வேனை சோதனையிட்டபோது அதில் துப்பாக்கி, போதைப்பொருள் போன்ற எதுவும் கிடைக்கவில்லை. அதன்பிறகே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 5 பேரும் சாமானியர்கள் என்பது தெரியவந்தது.

வன்முறையால் பெரும் பதற்றம்

இதனிடையே ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்த செய்தி அந்த நகரில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் கொதித்தெழுந்த உள்ளூர் மக்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. கோபமடைந்த பொதுமக்களில் சிலர் ராணுவ வீரர்களை அடித்து கீழே தள்ளி கால்களால் உதைத்தனர். இ்ந்த வன்முறையால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். எனினும் போராட்டக்காரர்களை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com