ஈராக்கில் பயங்கரம்: மினி பஸ்சில் குண்டுவெடிப்பு - 12 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

ஈராக்கில் மினி பேருந்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
ஈராக்கில் பயங்கரம்: மினி பஸ்சில் குண்டுவெடிப்பு - 12 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
Published on

பாக்தாத்,

ஈராக்கில் நேற்று முன்தினம் இரவு ஷியா பிரிவினரின் புனித நகரமான கர்பாலாவுக்கு வெளியே அல் ஹில்லா என்ற இடத்தை நோக்கி ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள ராணுவ சோதனைச்சாவடியை கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் பஸ்சில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. பஸ் பயணிகள் மரண ஓலமிட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் பஸ் உருக்குலைந்து போனது. அதில் பயணம் செய்த 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்களில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குண்டுவெடிப்புக்கு சற்று முன்னர், அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த ஒருவர்தான் தனது இருக்கைக்கு கீழே வெடிகுண்டு பையை வைத்து விட்டு கீழே இறங்கிச்சென்று, ரிமோட் கண்ட்ரோல் முறையில் குண்டுகளை வெடிக்க வைத்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பலியான அத்தனை பேரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிய வந்துள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என 2017-ல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு இதுதான் என சொல்லப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரை படையினர் பிடித்து விட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com