இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களுடன் மோடி சந்திப்பு

இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். வர்த்தகம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
Published on

ஒசாகா,

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டின்போது அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்.

இதன்படி அவர் நேற்று முன்தினம் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோரை சந்தித்து பேசினார்.

நேற்று அவர் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிலி அதிபர் செபாஸ்டின் பினரா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி இரு தரப்பு வர்த்தகம், முதலீடு, ராணுவம், கடல்சார் விவகாரம் ஆகியவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது பற்றி விவாதித்தார்.

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோவை சந்தித்து பேசியபோது, பிரதமர் மோடி இரு தரப்பு உறவு பற்றியும், வர்த்தகம், முதலீடு, உயிரி எரிபொருள் துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனை பிரதமர் மோடி சந்தித்து பேசியபோது, வர்த்தகம், முதலீடு, ராணுவம், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசனை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, விளையாட்டு, சுரங்க தொழில்நுட்பம், ராணுவம், கடல்சார் விவகாரம், இந்திய பசிபிக் விவகாரம் ஆகியவற்றில் ஒத்துழைக்க உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் சிலி அதிபர் செபாஸ்டின் பினரா ஆகியோருடன் பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் வாய்ப்புகள் குறித்து கருத்து பரிமாற்றங்கள் செய்து கொண்டார்.

பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ஜி-20 உச்சி மாநாட்டின்போது ஒருவரை ஒருவர் பார்த்தபோதெல்லாம் சாதாரணமாக பேசிக்கொண்டனர். கட்டை விரலை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com