

அபுதாபி,
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அபுதாபி நகரில் அமையவுள்ள முதல் இந்து கற்கோவிலுக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், 125 கோடி இந்தியர்கள் சார்பில் பிரதமர் மோடி அபுதாபி நகர இளவரசர் முகமது பின் சையத் அல் நஹ்யானுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
அதன்பின் பிரதமர் மோடி பேசும்பொழுது, இந்த கோவில் கட்டிடக்கலை மற்றும் வசீகரம் ஆகியவற்றிற்கான தனித்துவம் மிக்க ஒன்றாக மட்டுமின்றி, வாசுதைவ குடும்பகம் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்கும் என கூறினார்.
துபாயில் இருந்து அபுதாபி செல்லும் நெடுஞ்சாலையில் அபுதாபி நகரில் அமைய உள்ள கல்லால் ஆன முதல் இந்து கோவில் ஆகும். இது 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. 2020ம் ஆண்டில் கோவில் முழுமை பெறும். அனைத்து மத பின்னணி கொண்டவர்களும் இங்கு செல்லலாம்.
இந்த கோவில் மத்திய கிழக்கு நாடுகளில் அமையும் முதல் மரபுரீதியிலான இந்து கற்கோவில் ஆகும்.