சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதில் கோமா நிலைக்கு சென்ற நவாலானி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.‌
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி
Published on

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17-ந் தேதி ஜெர்மனியில் இருந்து ரஷியா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நவால்னிக்கு 2 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நவால்னிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து நவால்னி மாஸ்கோ ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி நவால்னி கோர்ட்டில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரும் நவால்னியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். அதே சமயம் கடந்த 2015-ம் ஆண்டு நவால்னி ஒன்றரை மாதம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி அவரது சிறை தண்டனையை 2 ஆண்டுகள் 6 மாதமாக குறைத்து

உத்தரவிட்டார்.

இதற்கிடையில் நவால்னியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐரோப்பிய மனித உரிமைகள் கோர்ட்டு ரஷிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com